பிரித்தானிய நாட்டு ஆணால் முதன்முறையாக குழந்தைப் பிரசவம்..

பிரிட்டன் நாட்டில் பெண்ணாக பிறந்து ஆணாக மாற ஆசைப்பட்டு அதற்குரிய அறுவை சிகிச்சை செய்த பின்னர் விந்தணு தானத்தின் மூலம் ஒருவர் குழந்தையை ஈன்றெடுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு இங்கிலாந்துக்கு உட்பட்ட குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட குரோமசோம்களின் கலகத்தை உணர்ந்ததால் நாம் குடியிருக்க தகுந்த உடல் இதுவல்ல.., என்பதை அறிந்தார்.

இதையடுத்து, தனது மன இயல்புக்கு தக்கவாறு முழுமை பெற்ற ஆணாக மாறிவிட தீர்மானித்தார். இதற்கான பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நிதி சுமார் 30 ஆயிரம் பவுண்டுகளை பிரிட்டன் நாட்டு அரசின் சுகாதார காப்புறுதி திட்டம் ஏற்றுக் கொண்டது.

பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஹேடன் ராபர்ட் கிராஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். தன்னை ஆணாகவே தக்கவைத்து கொள்ள தேவையான தொடர் சிகிச்சைகளையும் அவர் பெற்று வந்தார். ஆனால், தனது கருப்பையை மட்டும் அவர் அகற்றிக் கொள்ளவில்லை.

சூப்பர் மார்க்கெட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த நிலையில், தனது கருப்பையில் வளரும் கருமுட்டைகளை அதற்கான பாதுகாப்பு வங்கிகளில் சேமித்து தான் விரும்பிய போது குழந்தை பெற்றுக் கொள்ள ஹேடன் கிராஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது எதிர்கால திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக பிரிட்டன் அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தின் மூலம் கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான நிதியை இனி வழங்க இயலாது என்று அறிவித்து விட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஹேட்ன் கிராஸ், தன்னால் இனி முழு ஆணாக மாறி, வேறொரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கலை எண்ணி வேதனைப்பட்டார்.

ஒரு பெண்ணாகவே இருந்து உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நடைமுறைப்படுத்தினார். பேஸ்புக் மூலம் விந்து தானம் தொடர்பான வலைத்தளங்களில் மூழ்கி, ஒரு நபரை கண்டுபிடித்தார். அவரது விந்தணுவை தனது கருப்பையில் செலுத்திய பின்னர் தான் கருவுற்றிருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஹேடன் கிராஸ்(21), கடந்த 16-6-2017 அன்று குளூசெஸ்ட்டர்ஷைர் ராயல் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். தற்போது, மீண்டும் ஆணாகவே இருக்கப் போவதாக அறிவித்துள்ள இவர், தனது குழந்தைக்கு ஒரு வயதாகும் போது வேறு ஏதாவது வேலையில் சேர தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் முதல்முறை: பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தையை பிரசவித்த அதிசயம்

(rizmira)