பீடி மற்றும் சுருட்டுப் பக்கெட்டுகளிலும் உருவப்பட எச்சரிக்கை..

சிகரெட் பக்கெட்டுகளில் காணப்படும் எச்சரிக்கை உருவப்படம் போன்று, பீடி மற்றும் சுருட்டுப் பக்கெட்டுகளிலும் வெளியிடுவது தொடர்பில், சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

பல நோய்களுக்கு வித்திடும் புகைப் பழக்கத்தை இல்லாதொழிப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரம், சி​கரெட் பக்கெட்டுகளில், உருவப்பட எச்சரிக்கைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

“இருப்பினும், பீடி மற்றும் சுருட்டு ஆகியவற்றுக்கு, இவ்வாறான உருவப்பட எச்சரிக்கைகள் பிரசுரிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே, இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்தார்.

புகையிலை உற்பத்திகளுக்கான வரி, 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பீடி சுற்றப்பட்டுள்ள இலையின் இறக்குமதிக்கான வரி, 2000 – 3000 ரூபாய் வரை அதிகரிக்க, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில், பீடி மற்றும் சுருட்டுக்கான உருவப்பட எச்சரிக்கையும் விடுக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.