நமக்கிடையேயான அனைத்து பேதங்களையும் களைந்து, புதுவருடத்திலிருந்து புதிய சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள கைத்தொழில், வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற புத்தாண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் மேலும் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 30 ஆண்டு காலம் இந்நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்த சமாதானத்தை நிலைபெறச் செய்ய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நாம் நமக்குள் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனைவரையும் அன்புடன் நேசிக்க வேண்டும்.
இந்த அமைச்சைப் பொறுத்தவரையில் நாம் பாரிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே எல்லோரும் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
இங்கு பணிபுரியும் எவருக்கும் எந்த அநியாயமும் இடம்பெறுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. உங்கள் பிரச்சினைகளை எந்த சந்தர்ப்பத்திலும் என்னிடம் வந்து முறையிடலாம்.
நாட்டில் இன ஐக்கியத்தையும், இன நல்லுறவையும் கட்டியெழுப்ப இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் பூரண ஆதரவு வழங்க வேண்டும்.கடந்த அரசின் இறுதிப் பகுதியில் இனவாதம் தலைதூக்கியதாலேயே அந்த அரசு கவிழ்ந்தது.
தமிழ், சிங்கள, முஸ்லிம்களுக்கிடையே பிளவுகளை உருவாக்கி சிலர் குளிர்காய நினைக்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளியாதீர்கள். அலுவலகங்ளுக்குள் வந்த பின்னர் இன, மத பேதங்களை மறந்து பணியாற்றுங்கள். அதற்குரிய பிரதிபலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
எமது அமைச்சிலுள்ள உயரதிகாரிகள் இரவு, பகல் பாராது பணியாற்றுபவர்கள் அவர்களை நான் மெச்சுகின்றேன் எனவும் அமைச்சர் இங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் T.M.P.B.தென்னகோன் உற்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.