புதிய சிக்கலில் சிம்பு….

சிம்புவுக்கு படங்கள் ரிலீசாகிறதோ இல்லையோ அவரைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. அதுவும், குறிப்பாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படத்தின் செய்திகள் கடந்த இரண்டு வருடங்களாக வந்த வண்ணம் உள்ளது. ஆனால் படம் தான் இன்னும் ரிலீசாகவில்லை.

இப்படம் ஆரம்பித்தபிறகு சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனை, தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ்ன் பண பிரச்சனை என பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்தப் படம் ஒருவழியாக ஜூலை 17ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது புது பிரச்சனை ஒன்று எழுந்திருக்கிறது.

மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் ‘வாலு’ படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருக்கிறதாம். அதில் “வாலு படத்தின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் தற்போது வேறு ஒருவர் மூலமாக படத்தை வெளியிட முயன்று வருகிறார்கள். எனவே ‘வாலு’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

வாலு போய் கத்தி வந்த கதையாக, பல தடைகளைக் கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாலு படம் புதிய பிரச்சினையில் சிக்கியிருப்பதால் திட்டமிட்டபடி ஜூலை 17ம் திகதி படம் வெளியாகுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்