புதிய தேர்தல் முறையினால் சிறுபான்மையினருக்கு அநீதி ஏற்படாது…

புதிய தேர்தல் முறையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உருவாக்க வாக்களித்தவரகள் இன்று சில வரையறுக்கப்பட்ட விடயங்களுக்காக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று(09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய தேர்தல் முறை காரணமாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் ஏற்படாது.

தேர்தல் காலதாமதம் ஆக்கப்பட்டு வருகின்றது என்ற காரணத்தினால் ஜனநாயக முறைமைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பழைய முறைமைக்கு ஒரு போதும் மீள் திரும்ப முடியாது.

ஆகவே, மாகாண சபை தேர்தலை சிறுபான்மை மக்களை காரணம் காட்டி சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக ஜனநாயக கொள்கையினை மீறுவதற்கு உடந்தையாக செயற்பட முடியாது.

புதிய தேர்தல் முறைமையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபை தேர்தலை இவ்வருடத்திற்குள் நடத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.