புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக நிதி ஒதுக்கீட்டுக்கான அமைச்சரவைப் பத்திரம்

புற்றுநோயாளிகளுக்கான இலவச மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 1200 கோடி ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டுள்ளார்.

புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் ஒரு சில மருந்துகள் இரண்டரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான விலை கொண்டவையாகும்.

புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட ஒரு சிலர் தங்களுடைய சிகிச்சைகளுக்காக ஐம்பது தொடக்கம் அறுபது லட்சம் வரை செலவழிக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ள அனைத்துநோயாளிகளுக்கும் இவ்வாறான விலை உயர்ந்த மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தவோ, பெருந்தொகை செலவழித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவோ போதுமான பொருளாதார வசதி இல்லை.

இதனைக் கருத்திற்கொண்டு புற்றுநோயாளிகளுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக வழங்கும் வகையில் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.