பூங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
விசேட நீதிமன்றத்திற்கு பதிலாக மூன்று நீதிபதிகளை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி விஷேட நீதிமன்றமொன்றுக்கு பணிக்கவில்லை எனவும், மூவரடங்கிய குழுவின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்வதற்கு பணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் தற்போது 90 வீதம் நிறைவடைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.