பெற்றோருடன் சேர்ந்து இருக்க மறுக்கும் சிறுமி

தனது பெற்றோருடன் இணைந்து வாழ மறுக்கும் 16 வயது சிறுமியை  நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக  மேற்படி சிறுமி (வயது 14) இளைஞனொருவருடன் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருடன் வாழ்ந்துள்ள போதிலும், பொலிஸார் சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் திகதி, பெற்றோருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக அச்சிறுமி தனது வீட்டிலிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை(5) மீண்டும் சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க முற்பட்ட போதும் சிறுமி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டதுடன் பெற்றோரும் அவரை அழைத்து செல்ல மறுத்துவிட்டனர்.

இதனால் சிறுமியை கண்டி நீதவான் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.