பேராதனை, மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் கிளைகளை மாலைத்தீவில் அமைப்பதற்கு மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதற் தடவையாக இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதாகவும் இது இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச ரீதியில் உயர்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பென்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவின் ஜனாதிபதி இலங்கையின் 71ஆவது தேசிய தின விழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்த சந்தர்ப்பத்தில், அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழகத்தின் கிளையை மாலைத்தீவில் அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதற்காக மாலைத்தீவின் தனியான தீவொன்று வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருக்கும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்களும் மாலைத்தீவில் கல்வி நடவடிக்கையை முன்னெடுத்து கடைசி இரண்டு வருடம் இலங்கையில் தமது பாடநெறியை பூர்த்தி செய்யலாமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.