ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள், பேஸ்புக்கின் தலைமை நிறைவேற்றதிகாரி மார்க் சக்கர் பேர்க் மற்றும் டுவிட்டரின் தலைமை நிறைவேற்றதிகாரி ஜக் டோர்ஸி ஆகியோருக்கு புதிய காணொளிக் காட்சியொன்றில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
‘ஆதரவாளர்களின் தீச்சுவாலை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த 25 நிமிட காணொளிக் காட்சியில் மேற்படி இரு தலைமை நிறைவேற்றதிகாரிகளின் புகைப்படங்களும் துப்பாக்கி ரவை துளைத்திருப்பதை வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளடங்கியிருந்தது.
தீவிரவாதிகளின் சமூக இணையத்தளப் பக்கத்தில் இந்தக் காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தாம் 10,000 பேஸ்புக் கணக்குகளையும் 150 பேஸ்புக் குழுக்களையும் 5,000 டுவிட்டர் பக்கங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இதன்போது அந்தக் காணொளித் திரையில் ‘பேஸ்புக் மற்றும் டுவிட்டரின் ஸ்தாபகர்களான மார்க், ஜக்கிற்கு’ என்ற வாசகம் காண்பிக்கப்பட்டது.
கலிபா இராணுவத்தின் மகன்கள் என தம்மைத் தாமே அழைத்துக் கொண்டுள்ள அந்தக் குழு, பேஸ்புக் மற்றும் டுவிட்டரிலுள்ள தமது பக்கங்கள் அழிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமது பக்கங்கள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக பேஸ்புக் மற்றும் டுவிட்டரின் தளங்களை அழிப்பதுடன் மார்க் மற்றும் ஜக் ஆகியோரின் பெயர்களையே இல்லாமல் செய்துவிடவுள்ளதாகவும் ஐஎஸ் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.