(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கட்சியின் அடுத்த சம்மேளனத்தின் போது புதிய தவிசாளர் நியமிக்கப்படுவார், ஆகவே அப்பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்படுவார். தற்போது எமது கட்சி சூறாவளியில் சிக்கியுள்ளது. ஆனால் வீழ்ந்துவிடவில்லை. நிச்சயம் மீண்டெழும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் முடிந்தால் தன்னை நீக்கி காட்டுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று முன்தினம் சவால் விடுத்தார். டலஸ் அழகப்பெருமவும் இந்த சவாலை விடுத்திருந்தார்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி விடுத்துள்ள சவாலையடுத்தே இவ்வாறான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த கட்சி சம்மேளனத்தின்போது பதவிகள் பறிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுன, சூளுரைத்துள்ளது.
நாம் ஒருபோதும் அவசரப்படமாட்டோம்
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றபோது, இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க,
உடனடியாக நாம் பதவி நீக்க மாட்டோம். அவசரப்படவும் மாட்டோம். சுதந்திரக்கட்சியில் இருந்துகொண்டே மைத்திரியை விமர்சித்தோம். ஆனாலும் அவர் அவசரப்படவில்லை.
இருப்பினும் அடுத்த சம்மேளத்தில் புதிய தவிசாளரை நாம் நியமிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
