பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த பொதுத் தேர்தலானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடத்தப்படவுள்ளதுடன் தேர்தல் நடத்தப்படும் வரையில் சபாநாயகர் பதவியில் நீடிக்குமாறும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார்.

இக்கோரிக்கையினை அண்மையில் சபாநாயகர், ஜனாதிபதியை சந்திக்க சென்றிருந்த போது ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

இதன் போது, தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள் அனைத்தையும் எதிர்வரும் 7ம் திகதி ஒப்படைத்து தாம் சபாநாயகர் பதவியை விட்டு விலகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், அவசர நிலைமையொன்றின் போது நாடாளுமன்றை கூட்ட நேரிட்டால் சபாநாயகரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி வரையில் பதவியில் நீடிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மாசற்ற அரசியல்வாதி என்ற ரீதியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை வகிக்கக் கூட சமல் ராஜபக்ஷ பொருத்தமானவர் என ஜனாதிபதி இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

(riz)