புகையிரத தொழில் சங்க நடவடிக்கையினால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை குறைப்பதற்கு விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று(12) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேலை நிறுத்தம் முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டமை ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், மக்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை தொடர்பில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு புகையிரத பொது முகாமையாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக விசேட பஸ் சேவைகள் அமுலாகின்றது.
வேலை நிறுத்தம் முடிவடையும் வரை தற்காலிகமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.