இலங்கையில் பண்டங்களுக்கான உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளையும் உள்ளடக்கிய வகையில் வெளியிடப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் உத்தரவாத சான்றிதழ்களின் உள்ளடக்கம் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல், மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1966/43 என்ற இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீண்ட காலம் பயன்படுத்தக் கூடிய பண்டங்களுக்காக வழங்கப்படும் உத்தரவாதச் சான்றிதழ் தற்போது ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றது.
ஆங்கில மொழியறிவு அற்றவர்களுக்கு இந்த சான்றிதழ்களின் உள்ளடக்கம் நிபந்தனைகள் பற்றி தெரிந்து கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.
இது தொடாபில் நுகர்வோர் அதிகாரசபைக்கு அடிக்கடி முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எதிர்வரும் ஆண்டு முதல் உத்தரவாத சான்றிதழின் அனைத்து விடயங்களும் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ் மற்றம் ஆங்கிலம்) அச்சிடப்பட்டு வழங்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரட்ன ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.