2017ம் ஆண்டினது வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. குறித்த இந்தப் பரிந்துரை குறித்து இன்று(15) தீர்மானமிக்கதோர் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் 25,000 ரூபா தண்டப்பணம் நடைமுறைப்படுத்தும் காலம் பற்றி நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக வீதிப் போக்குவரத்து குறித்த தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
25,000 ரூபா அபராதத்தை குறைப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்ட அவர்; அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், குடிபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட 7 வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கு இவ்வாறு 25,000 ரூபா அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த 25,000 ரூபா அபராதத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்திருந்தார்.
நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியனவற்றின் செயலாளர்கள், மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு, தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், போக்குவரத்து சங்கங்களின் பிரரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த இந்தக் குழு இன்று கூடி, 25,000 ரூபா தண்டப்பணம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளது.