பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத்தடை விதிக்கப்பட உள்ளது.

பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும், அது தொடர்பிலான விளம்பரங்களை செய்யவும் தடை விதிக்கும் வகையிலான சட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

வர்த்தக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளல், வாகனம் செலுத்துதல் ஆகியன உத்தேச புதிய சட்டத்தில் தடை செய்யப்படவுள்ளது.

புதிய சட்டத்தின் அடிப்படையில் சமூக சேவைகளில் ஈடுபடுதல், சமய மற்றும் கல்வி நடவடிக்கைகளில் மட்டுமே பௌத்த பிக்குகள் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரங்க இடங்களில் பௌத்த பிக்கு ஒருவருக்கு உசிதமாகா வகையில் நடந்து கொள்ளவும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறுகளை இழைக்கும் பௌத்த பிக்குகள், பிக்குகளுக்கான நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குற்றம் இழைக்கும் பௌத்த பிக்குகள், பிக்கு அந்தஸ்தை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த பிக்குகளின் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளாத பௌத்த பிக்குகளுக்கு 50,000 ரூபா அபராதமும், ஓராண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடிய வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பௌத்த பிக்குகளுக்கான புதிய சட்டம் உருவாக்கும் உத்தேச யோசனை நேற்று (12) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் சில பௌத்த பிக்குகள் வானொலி தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து ஜோதிட ஆலோசனைகள் மற்றும் வசிய மாந்திரீகங்களை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இன்னும், இவ்வாறான சேவைகளை வழங்க பெருந்தொகை பணம் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.