பௌத்த மதத்திற்கான முதலிடத்தை நீக்க அனுமதியோம்.. – தினேஷ்..

அரசியலமைப்பு தொடர்பில் கட்சிகளிடையே உடன்படாத பல விடயங்கள் காணப்படுகின்ற நிலையில், பரந்த மக்கள் கருத்து இங்கு கவனிக்கப்படாது சிறு குழுவொன்றின் அறிக்கையை மையமாக வைத்துக் கொண்டே குறித்த இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டி உள்ளார்.

வழிபடுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன;

“..அறிக்கையில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதமர் முன்வைத்த விடயங்களுக்கிடையில் முரணான ஏற்க முடியாத விடயங்களும் இருக்கின்றன.

இந்த அறிக்கையில் சகல மக்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். மக்கள் என்பது அரச சார்பற்ற நிறுவனங்களல்ல. இங்கு நாம் 14 அம்சங்களை முன்வைத்திருந்தோம்.

ஒற்றையாட்சி என்பது தொடர வேண்டும். ஆனால் இதனை ஆங்கிலத்தில் ஒருவாரும் தமிழில் வேறு விதமாகவும் அர்த்தம் கற்பித்திருப்பது நாடகமாகும். ஒற்றையாட்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பலப்படுத்த வேண்டும். உப குழுக்களில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

சர்வாதிகாரமாக யாப்பு உருவாக்க முடியாது. பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை நீக்க இடமளிக்க மாட்டோம்..” என்றார். அவரின் கருத்திற்கு ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதோடு அவர் சபையை தவறாக வழிநடத்துவதாக குறிப்பிட்டனர்.

அவரின் உரையினால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அடுத்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்,“.. நானும் வழிப்படுத்தல் குழுவில் அங்கம் வகிக்கிறேன். இந்த அறிக்கையினூடாக யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அல்ல. புத்த மதத்திற்கு உள்ள முன்னுரிமை அணுவளவும் குறைக்கப்படவில்லை.
எனக்கு பேச இடமளிக்காதிருப்பது எனது இனத்திற்கு செய்யும் அநீதியாகும்…” என்றார்.

 

(rizmira)