மேலூர் தம்பதியர் தன்னை மகன் என உரிமை கோரும் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது;
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நான் அவர்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், வயதான அந்த தம்பதியருக்கு நான் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நான் அவர்களுடைய மகன் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் மேலூர் கோர்ட்டு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
நான் 1983-ம் ஆண்டு சென்னையில் உள்ள எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். தற்போது சினிமாவில் நடிகனாக உள்ளேன். கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தாக்கல் செய்துள்ள வழக்கால் எனது பெற்றோர் சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, என்னை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதோடு, வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு நேற்று(25) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 8-ந் திகதிக்கு ஒத்திவைத்தார்.