மகன் காணாமல் போனதால் விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

கடைக்குச் சென்ற மகன் வீடு திரும்பாத நிலையில் விரக்தியடைந்த தந்தை ஒரு வாரம் கழிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காணாமல்போன பாடசாலை மாணவனான யோகநாதன் குருசேத்மன் என்பவரது தாயார் யோகநாதன் தவசிமணி நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்காவின் ஆணைக் குழுவினுடைய விசாரணைகளின் போது சாட்சியமளித்தார்.

காணாமல் போனோரை கண்டறிவதாக கூறும் ஸ்ரீ அரசின் நாடகக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இடம்பெற்றது.

நாடகக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்றுஆணையாளர்கள் உள்ளடங்கலாக குறித்த விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே குறித்த தாய் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில்,
சிலாபத்துறை சவேரியார்புரத்தைச் சேர்ந்த நாங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில் மன்னார் பெரியகமம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம். கடந்த 19.03.2008 அன்று இரவு எனது மகன் மன்னார் பெரியகமம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து சம்போ வேண்டுவதற்காக கடைக்குச் சென்றார். எனினும் வீடு திரும்பவில்லை.
எனது மகன் யோகநாதன் குருசேத்மன் காணாமல் போகும் போது அவருக்கு வயது-19. மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தார். கடைக்குச் சென்ற மகன் வீடு திரும்பாத நிலையில் நாங்கள் அச்சத்தில் இருந்தோம். எனது கணவர் மகனை தேடிய போதும் மகன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் எனது கணவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் தற்போது யாரும் அற்ற நிலையில் தனிமையாக எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றேன். பல்வேறு துயரங்களையும் சந்தித்து வருகின்றேன்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் நான் எனது மகன் தொடர்பாக அடிக்கடி தொடர்பில் இருக்கின்றேன். அந்த வகையிலே இடம்பெற்ற சாட்சியம் வழங்கும் நிகழ்வில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நான் சாட்சியம் வழங்க வந்தேன். ஆனால் இதுவரைக்கும் எனது மகனைப் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை. நான் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் எனது மகனை தேடி கண்டுபிடித்து தாருங்கள் என ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என குறித்த தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.