மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு

அந்த பதிவில் மேலும், எனது நண்பரும் இலங்கை தலைவருமான மகிந்த ராஜபக்சவை புதுடில்லியில் பொது நிகழ்வொன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன்.

அவர் மழைக்காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வர முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் இல்லம் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு பின்னர் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த உள்ளிட்ட பலரின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தாக்கி அழிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னர் அவர் பதிவிட்டிருந்த போது, பிரதமராக இருந்த மகிந்தவின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால் அதற்கு காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என சுப்ரமணியம் சுவாமி முன்னர் ஆவேசம் வெளியிட்டிருந்தார்.

அத்துடன், எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்ப கோரிக்கை

இதேவேளை மே 9ஆம் திகதி வன்முறை சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென அவர் கோரிக்யொன்றையும் முன்வைத்திருந்தார்.

மேலும், இந்தியாவில் அரசியல் முக்கியஸ்தரான சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் அதிலும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.