(FASTNEWS|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் இன்று (18) நடைபெறுகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், தமிழகத்திலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்றைய தினம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய குற்றச்சாட்டு எழுந்ததால், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் குடியரசுத் தலைவரினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் இன்றைய இரண்டாம் கட்ட வாக்களிப்பு 95 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேஷ், அஸாம், ஒடிசா, பீகார், சத்திஸ்கர், மேற்கு வங்கம், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.
7 கட்டங்களாக நடைபெறும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பு கடந்த 11 ஆம் திகதி, 91 தொகுதிகளில் நடைபெற்றிருந்தது.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வாக்கெண்ணும் பணிகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.