மங்கள’வின் மக்கள் தொடர்பு அதிகாரி பதவி இராஜினாமா…

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் மக்கள் தொடர்பு அதிகாரி சமீர மனஹர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரிடம் சமீர மனஹ நேற்று(08) சமர்ப்பித்த தனது இராஜினாமா கடிதத்தில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்று தான் நிரபராதி என உறுதியாகும் வரையில் இவ்வாறு பதவியிலிருந்து விலகி நிற்பதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தான் உள்ளிட்ட நால்வர் பயணித்த ஜீப்பில் போதைப்பொருள் இருந்ததாக தங்கள் மீது குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டமையினூடாக நிதியமைச்சுக்கும் நல்லாட்சிக்கும் எதிரான அரசியல் சதியொன்று இடம்பெறுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் குறித்த அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் தவிர தான் உள்ளிட்ட ஏனைய மூவரும் அச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தொடர்பாக எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்பட வில்லையெனவும், கைது செய்யப்பட்ட முதல் சந்தேகநபருடன் தாங்கள் மூவரும் இருந்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கல்கிஸை நீதிமன்றில் தெரிவித்திருந்ததாக அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)