மஞ்சள் நிறம் கொண்ட கடவைகள் நிறம் மாறுகின்றன.

இலங்கையில், மஞ்சள் நிறத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதிக் கடவைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வௌ்ளை நிறத்தில் குறித்துக்காட்டும் வீதிக் கடவைகளை அறிமுகப்படுத்தும் பணிகள், அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம், கொழும்பில் ஆரம்பிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டம், எதிர்வரும் காலங்களில், ஏனைய மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று, அச்சபை அறிவித்துள்ளது.

பனிபொழிவைக்கொண்ட நாடுகளிலேயே வீதிகளை கடக்க மஞ்சள் கடவைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாடுகளில், வெள்ளைக் கடவைகளாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், இலங்கையிலும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக,  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.