மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடியில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் கொலை செய்யப்பட்டுள்ளானரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவுக்கடி, முருகன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து மதுவந்தி மற்றும் அவரது மகன் மதுசன் ஆகிய இருவருவரின் சடலங்களையும், இன்று(18) காலை, ஏறாவூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர்கள் வசித்து வரும் வீட்டின் கூரை பிரிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுவதாகவும் கூரையைப் பிரித்து அதனூடாக வீட்டினுள் இறங்கி இனந்தெரியாத நபர்கள், இவர்களை அடித்துக் கொலை செய்திருக்கலாமென, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருவரது முகத்திலும் கடுங்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுவந்தியின் கணவர், வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் தாயும் மகனும் இங்கு வசித்து வந்துள்ளனர்.
உறவினர் ஒருவர், இன்று காலை இவர்களது வீட்டுக்குச் சென்ற போது, வீடு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது, தாயும் மகனும் சடலமாகக் கிடப்பதை கண்ட அந்த உறவினர், ஏனையோருக்கு அறிவித்ததுடன், ஏறாவூர் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் ,தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(rizmira)