மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை – பிரதமர்

இலங்கை மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் குறித்த முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை ரத்துச் செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்; மத்திய வங்கியின் முறி பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், பொது மக்களின் பணத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியாவிட்டால், இந்த இடத்தில் இருக்கக் கூடாது.

அதனால் மத்திய வங்கியின் முறி பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் மூலம் செல்வந்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் உள்ள மக்களின் பணம் பாதுகாக்கப்பட்டது.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் திருடர்களுக்காக பேசுவது ஆச்சரியமான விடயமல்ல.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் முறி பத்திர கொடுக்கல் வாங்கலில் தவறு நடந்துள்ளது என கூறியிருந்தால், அதனை இரத்துச் செய்ய தயார்.

அத்துடன் இந்த மத்திய வங்கியின் முறி பத்திர தொடர்பான விவகாரம் குறித்து புதிய நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

(riz)