2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்காக பணம் செலவிடப்பட்டமை குறித்து கோப் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது மேற்கிந்திய தீவு நாடுகளுக்கு பயணம் செய்த 140 பேருக்காக 4 லட்சத்து 43 ஆயிரத்து 100 ரூபாவை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வழங்கி பதில் அளித்திருந்தது.
இது தொடர்பாக, வங்கியின் அதிகாரிகளை அழைத்து விசாரிக்க உள்ள கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற 140 பேருக்கு தலா 3 ஆயிரத்து 165 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளமையானது தமக்கு பிரச்சினையாக இருப்பதால், இது சம்பந்தமாக அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயணம் மேற்கொண்டவர்களுக்காக 4 லட்சத்து 34 ஆயிரத்து 100 ரூபா செலவிடப்பட்டிருந்தாக கூறப்பட்டுள்ள போதிலும் செலவு 35 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 718 ரூபா எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடு மற்றும் நகரை தெரிவு செய்யும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளின் சென்ட் கிட்ஸ் நகரில் நடைபெற்றது.
வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.