மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை ஊடாக தீர்வு – ஜனாதிபதி.

மத்திய வங்கி பிணைமுறிகள் விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு எவ்வித தீர்வும் காண முடியாது. இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமாயின் நீதிமன்றம் ஊடாகவே தீர்வை பெற்றுகொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் ஆரம்பகட்ட நிகழ்வு தற்போது மஹரகமவில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் எனது ஆட்சியில் எவரும் தவறு செய்யாமல் இருப்பதற்குமே நான் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து விலகி வந்தேன்.

எனது ஆட்சியில் தூய்மையான அரசியல் இருக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் என்ன செய்கிறார்கள், என்ன உணவு உண்ணுகிறார்கள், எந்த வாகனத்தில் செல்கிறார்கள் என அனைத்தும் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலமே தாம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி மக்கள் சேவை செய்ய தகுதியானவரா அல்லது தகுதியற்றவரா என்பதை இனம் கண்டுகொள்ள முடியும்.

எனவே மத்தி வங்கியில் இடம்பெற்ற பிணை முறிகள் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுச் சென்று அதன் ஊடாக தீர்வை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.