தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவதற்கு தனது மனைவியின் பெற்றோர் மறுத்ததால், மனைவியின் மூக்கை கடித்து படுகாயப்படுத்திய நபர் ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 23 வயதான சிவ்பிரசாத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிவ்பிரசாத்துக்கும் ராஜ்குமாரி எனும் யுவதிக்கும் 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
அப்போதிருந்து, தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு சிவ்பிரசாத் கொடுமைப்படுத்தி வந்ததாக 21 வயதான ராஜ்குமாரி தெரிவித்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சிவ் பிரசாத் தனக்கு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கிதருமாறு தனது மனைவியை அடித்து துன்புறுத்தினாராம்.
இதன்காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ராஜ்குமாரி, தனது தாய் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். எனினும் சிவ்பிரசாத்தின் தொல்லைகள் முடி வடையவில்லை. ராஜ்குமாரி வகுப்புக்கு செல்லும்போதெல்லாம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார் சிவ்பிரசாத்.
அண்மையில் ராஜ்குமாரி வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில், அவரை வழிமறித்த சிவ்பிரசாத் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
தன்னுடன் வீடு திரும்புமாறும் ராஜ்குமாரியை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு ராஜ்குமாரி மறுத்துவிடவே, அவரை தாக்கியதுடன் மட்டுமல்லாமல் அவரின் மூக்கையும் சிவ்பிரசாத் கடித்து குதறியுள்ளார்.
வலியால் துடித்த ராஜ்குமாரியை அவரின் பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் மூக்கு கொடூரமான முறையில் சேதமடைந்துள்ளதால், அவருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ராஜ்குமாரி கூறுகையில், “திருமணமான நாளிலிருந்து எனது கணவரும் அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் சீதனம் தருமாறு கேட்டு சித்திரவதை செய்தனர். பெருந்தொகை பணமும் ஆடம்பர மோட்டார் சைக்கிளும் வேண்டுமென அவர்கள் கூறினர்.
ஆனால், அவற்றை கொடுக்கும் வசதி எனது பெற்றோரிடம் இல்லை. அவர்கள் என்னை தாக்கியதுடன் பணம், மோட்டார் சைக்கிள் வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
எனது படிப்பை அவர்கள் நிறுத்தியபோது நான் எனது பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பினேன். எனது கணவரும் அவரின் பெற்றோரும் எனது கல்வியை நிறுத்தி விடுவார்கள் என்பதால் கணவரின் வீட்டுக்கு திரும்பிச் செல்ல மறுத்தேன். அதற்காக அவர் எனது மூக்கை கடித்து என்னை இப்படியாக்கிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் இடம்பெற்ற தினத்திலேயே சிவ்பிரசாத்தை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் அஷோக் குமார் கூறுகையில், “தனது மனைவி வகுப்புக்கு செல்லும்போது அணியும் ஆடை தனக்குப்பிடிக்கவில்லை என சிவ்பிரசாத் கூறினார்.
ஆனால், இச் சம்பவம் இடம்பெற்றபோது அவரின் மனைவி ட்ரவுசர், ஷேர்ட் அணிந்திருந்தார். சீதனக் கோரிக்கை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விசாரித்து வருகிறோம். இதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.