மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று(06) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று(05) இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை வைத்திய காரணங்களினால் இறந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை குறித்த தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும்,பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியுள்ளதோடு,பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த இருவரையும் உடனடியாக மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.