மரண தண்டனையினை மீள் அமுல்படுத்தல் தொடர்பான வாதம் இன்று நாடாளுமன்றில்

மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பாக இன்று(6) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முழுநாள் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வித்தியா மற்றும் கொட்டதெனியாவ சிறுமி சேயா சதவ்மி ஆகியோரின் கொலைகளையும் போதைப் பொருள் கடத்தல்களின் அதிகரிப்பையும் அடுத்து மரண தண்டனையை மீள நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு கோரி ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர முன்வைத்துள்ள ஒத்திவைப்பு பிரேரணை இன்று இடம்பெறுகிறது.

இதேவேளை நாளை புதன்கிழமை எதிர்க்கட்சி முன்வைக்கும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை இடம்பெற இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.

தண்டனைக்குரிய விடயங்களில் புரிந்துணர்வுடன் செயற்படுவது தொடர்பான கட்டளை மீதான விவாதம் வியாழக்கிழமை இடம்பெறவிருக்கும் அதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பான முழுநாள் ஒத்திவைப்பு வேளை விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.

ஜே. வி. பி. பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படுகிறது.

சேயா சதெவ்மினியின் கொலையை அடுத்து அடுத்த வருடம் மரண தண்டனையை மீள நிறைவேற்றுவது தொடர்பான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக ஜனாதிபதி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

(riz)