அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடின் மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் மூன்று பிரதான கோரிக்கைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தன.
இதன்போது குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த எழுத்துமூல வாக்குறுதியையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.
எனினும், இன்று வரை தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாததால் தங்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜயந்த பரெய்கம தெரிவித்துள்ளார்.
- திருகோணமலையிலுள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்துக்குக் கையளிப்பதை நிறுத்தவேண்டும்,
- அம்பாந்தோட்டை துறைமுகத்தின் எண்ணெய் விநியோகப் பொறுப்பை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவேண்டும்.
- சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசின் செலவில் நவீனமயப்படுத்த வேண்டும்
என்ற மூன்று பிரதான கோரிக்கைகளின் கீழ் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.