முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் வாழ் உயிரினங்கள் கும்பல் கும்பலாக உயிரிழந்து மிதப்பதால் அந்தப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்
2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதல் இடம்பெறமுன்னரும் கடல்வாழ் உயிரினங்கள் இலங்கையின் கரையோரங்களில் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மிதந்ததால் மீண்டும் ஒரு சுனாமி அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த மீன்கள் மிதப்பதால் வட்டுவாகல் பாலத்தால் செல்லும் போது துர்நாற்றம் வீசி வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியிடம் கேட்டபோது கடந்த ஆண்டும் நீர்வற்றி வறட்சியால் மீன்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்ததுடன், அதேபோல்தான் இந்த ஆண்டும் வரட்சி காரணமாகவே மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் மிதந்து வருவதாக கூறினர்.
கடந்த ஆண்டு இவ்வாறான சம்பம் இடம்பெற்ற போது நாரா என்ற கடற்தொழில் ஆய்வு நிறுவனம் பரிசோதனை மேற்கொண்டு மீன்களுக்கான ஓட்சிசன் இல்லாத காரணத்தால் மீன்கள் உயிரிழந்து மிதப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.