மலசலகூட கோப்பைக்குள் என் தலையை அமுக்கியவர் வொற்சன் – மிற்சல் தகவல்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான மிற்சல் ஜோன்சனும் ஷேன் வொற்சனும், நட்புரீதியான மோதலொன்றின் போது, மலசலகூடம் வரை சென்றனர் என, மிற்சல் ஜோன்சன் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள அவரது சுயசரிதையிலேயே, இவ்விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில், அப்போது இளம் வீரர்களாக இருந்த ஜோன்சனும் வொற்சனும், அடிலெய்டில் காணப்பட்ட கிரிக்கெட் அக்கடமியில் சேர்க்கப்பட்டனர். அப்போது ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரை, அங்கு தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் இணைந்து பார்ப்பதோடு, விளம்பர இடைவேளையின் போது, நட்புரீதியான மல்யுத்தத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.

ஒருநாள், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், சில வீரர்கள் இணைந்து, ஜோன்சனை தரையில் இழுத்தவாறு, மலசலகூடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர், மலசலகூட கழிவுக்கலனுள், ஜோன்சனின் தலையைச் செலுத்தியுள்ளனர். அப்போது, தன்னைத் தள்ளியவர்களை ஜோன்சன் பிடித்த போது, அது வொற்சன் என்பதைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர், மேலதிக மோதலைத் தவிர்த்ததாக, ஜோன்சன் குறிப்பிட்டார்.

இவ்வாறிருந்த ஜோன்சனும் வொற்சனும், பின்னர் மிகவும் நெருக்கமான வீரர்களாக மாறினர். 2013ஆம் ஆண்டு, வீட்டுப்பாடம் செய்யாமையின் காரணமாக ஜோன்சன், வொற்சன் உள்ளிட்ட நால்வர் இடைநிறுத்தப்பட்ட போது, வொற்சனுடன் அதிக நேரத்தை ஜோன்சன் செலவிடுகிறார் எனவும் அது பிழையானது எனவும், அப்போதைய பயிற்றுநர் மிக்கி ஆர்தர் தெரிவிக்குமளவுக்கு, அந்த நெருக்கம் நீடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.