(FASTNEWS|COLOMBO) – மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பள்ளிக்கூடங்களில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள பசிர் குடங் நகரிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் இருந்து நச்சுவாயு வெளியேறி அதனை சுவாசிக்கும் மக்கள் மற்றும் குறிப்பாக சிறுவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பசிர் குடங் நகரில் உள்ள 15 பள்ளிக்கூடங்களில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்ததையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நச்சுக்காற்றை சுவாசித்ததே மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒரு வார காலத்துக்கு மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.