மழையுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்ககூடும்…

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்று சற்று அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எத்ரிவு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35–45 கிலோமீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.