மஹிந்த’வின் சாரதியான கெப்டன் திஸ்ஸவின் பிணை கோரிக்கை மறுப்பு..

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியான கெப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த பீரிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் இன்று(11) நிராகரித்துள்ளது.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான, கடுவலை பிரதேசத்தில் உள்ள காணியில் சட்டவிரோதமான முறையில் கல் குவாரியை நடத்திச் சென்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிணை மனுவை நிராகரித்த கொழும்பு மேலதி நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இரண்டாவது சந்தேக நபரான புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த பீரிஸ், தான் நீதிமன்றில் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டியது அவசியம் என, நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தார்.

தான், கல்குவாரியில் வேலை செய்த ஊழியர் மாத்திரமே என தெரிவித்தபோது, தான் சொல்லவுள்ள விடயத்தை சொல்வதா, இல்லையா என, இன்னும் நன்றாக யோசித்து பார்க்குமாறு, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், அச்சுறுத்தல் எதுவும் காணப்பட்டால் அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதவான் கூறியுள்ளார்.

மேலும், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்குவது குறித்து எதிர்வரும் 18ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என, நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)