மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை குறித்து சாகல கருத்து…

நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏதும் இல்லாத காரணத்தினாலேயே அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்கியே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். விசேட தேவைகளின் போது அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும என்றும் அவர் கூறினார்.

நாடாளமன்றில் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரான விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட ஒழுங்குப்பிரச்சினைக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர்,இன்று(05) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஓய்வு பெறும் போது அவரின் பாதுகாப்புக்காக 66 பேர் வழங்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியில் 18 பேரே அவரின் பாதுகாப்புக்காக இருந்தனர். அதேபோல், டி.பி.விஜயதுங்க ஓய்வு பெறும் போதும் 78 பேர் வழங்கப்பட்டு, 12 ஆக இறுதியில் குறைக்கப்பட்டது. அத்தோடு, பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு இணங்க, 198 பேரை அப்போது அவருக்கான பாதுகாப்புக்கு வழங்கினோம்.

பின்னர் படிப்படியாக அது குறைக்கப்பட்டு 12 இராணுவத்தினரும் 69 பொலிஸாரும் அவரின் பாதுகாப்புக்காக இருந்தனர். இத்தொகை மேலும்; குறைவடைந்து தற்போது வெறும் 59 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். இப்படி இடம்பெறுவதானது சாதாரண ஒரு விடயமாகும்.

இந்நிலையில, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, 2015 இல் ஓய்வு பெறும் போது 102 இராணுவத்தையும் 103 பொலிஸாரையும் நாம் வழங்கியிருந்தோம். பின்னர் இராணுவத்தினரை பிரபுக்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டியத் தேவையில்லை என்று அரசாங்கத்தின் கொள்கை ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கான இராணுவப் பாதுகாப்பை வாபஸ் பெறப்பட்டு அத்தொகைக்கு நிகரான பொலிஸாரை நியமித்தோம். இதற்கு கூடுதலான விசேட அதிரடிப் படையின் 26 உறுப்பினர்களையும் நாம் மஹிந்தவுக்கு வழங்கினோம்.

இவ்வாறு மொத்தமான அவரின் பாதுகாப்புக்காக 229 பேரை நாம் கடந்த காலங்களில் வழங்கியிருந்தோம். எனினும், இவ்வளவு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தேவையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான் 42 பொலிஸாரின் பாதுகாப்பினை நாம் தற்போது வாபஸ் பெற்றுள்ளோம்.

தற்போது, அவரின் பாதுகாப்புக்கு 187 பேர் உள்ளனர். இது பொலிஸ் மா அதிபருக்குரிய கடமையாகும். அதையும் மீறி விசேட கூட்டங்கள் உள்ளிட்ட தேவைகளுக்கு அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரபுக்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கோரப்பட்டால் அதனைப் பெற்றுக் கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார்.