ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் ஜனாதிபதி தரப்பில் ஊழல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்படுவது குறித்து தமக்கு பிரச்சினை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 11ம் திகதி கட்சியின் மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் அதன்பின் 14ம் திகதி கண்டியில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட மாட்டாதெனவும் அதன்மூலம் முன்னாள் அரசாங்கத்திற்கும் இன்னாள் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் எத்தனோல் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் கூறினார்.
எனினும் கடந்த ஆட்சி காலத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தவறு செய்ய துணைபோன அரச ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்படுவதாகவும் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
(riz)