இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் தாம் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிந்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கனடா – டோரன்டோ பகுதியிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு முன்னதாகவே அறிவித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடரும் பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக தாம் பாரிய யுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் 2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அறிவித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே தான் மஹிந்த ராஜபக்ஷவை அன்று கண்டிக்கவில்லை, இன்னும் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது, மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளியென நீதியின் முன் நிரூபிக்கப்பட்டால் தான் அதில் தலையிடுவதில்லை எனவும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.