முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பதற்காக தங்காலைக்கு வாகனத் தொடரணியொன்று
மஹிந்தவின் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி இவ்வாறு வாகனத் தொடரணியாக சென்று மஹிந்தவை அரசியலில் ஈடுபடுமாறு அழைக்க உள்ளனர்.
கூட்டமைப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இத்தொடரணியில் பங்கேற்கவுள்ளனர்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார்.
மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, குமார வெல்கம, எஸ்.எம். சந்திரசேன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்டவர்களைக் கொண்ட 15 பேர் அடங்கிய கமிட்டியின் தீர்மானத்திற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு வாகனத் தொடரணியாக சென்று, அவரை அழைத்து வர இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டை பாதுகாக்க தேர்தலில் போட்டியிடுமாறு மஹிந்தவிடம் கோரப்பட உள்ளது. இக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என நம்பப்படுகின்றது.