மஹிந்த உட்பட ஏழுபெரின் வழக்கிற்கு ஆதாரம் சேகரிக்க இ.போ.ச கோரிக்கை

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 14 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழுபேருக்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்குறித்த வழக்குத் தொடர்பாகக் கூடுதல் ஆதாரங்களைச் சேர்ப்பதற்குரிய நாளாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஷிராணி குணரத்ன நவம்பர் 11ஆம் திகதியை நிர்ணயித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களைக் கொண்டு செல்லவே இந்தக் குறித்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கைப் போக்குவரத்துச் சபை, இந்த வழக்கை சோமரத்ன அசோசியேட் ஊடாக தாக்கல் செய்திருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழு உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் காமினி செனரத் ஆகியோர் உட்பட எழுவரை, இலங்கை போக்குவரத்துச் சபை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.