மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடலாம், ஆனால் மீண்டும் நாட் டில் ஆட்சிக்கு வர முடியாது எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, தனிப்பட்ட ரீதியில் மஹிந்த மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அவரது குடும்ப ஆக்கிரமிப்பு அரசியல் கொள்கைகளை எதிர்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்;
மஹிந்த ராஜபக்ஷ கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை மதிக்கவில்லை. அவர்கள் ஒதுக்கப்பட்டனர். இவ்வாறு கட்சிக்குள் புதியதொரு குழுவை உருவாக்கினார்.
தனது குடும்பத்தை மட்டுமே கட்சிக்குள் பலப்படுத்தினார். தனது தலைவர் பதவிக்காலத்தை அவரும் அவரது குழுவினரும் திரும்பிப் பார்க்க வேண்டும். இவ்வாறு கட்சிக்குள் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டு பொதுத் தேர்தலில் குருணாகலையில் போட்டியிட்டார். அங்கு 11 ஆக இருந்த எமது எம்.பி.க்களின் தொகை 8 ஆக குறைந்தது. மஹிந்த பிரபல்யமானவர் என்றால் இவ்வாறு நடந்திருக்குமா?
கடந்த ஆட்சியில் பிழைகள் செய்தவர்கள் மீண்டும் எமது கட்சியை தேடி வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நாங்கள் பதவி வழங்கவில்லை. மாறாக கட்சியை தூய்மைப்படுத்தி பலப்படுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறோம்.
மஹிந்தவுக்கு இன்று உண்மை புரிந்திருந்தாலும் மீண்டும் எம்மோடு இணைய முடியாது எனத்தெரிவித்துள்ளார்.