மஹிந்த ராஜபக்ஷ சீனா வந்தமை குறித்து எமக்குத் தெரியாது – சீன வெளிவிவகார அமைச்சு..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மஹிந்த ராஜபக்ஷ சீனா சென்றுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் புறப்படமுன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் திகதி சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனினும் பீஜிங்கில் நேற்று(25) நடந்த நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஜெயங் சுவாங்கிடம்,

மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பயணத்தில் சீனா எதனை எதிர்பார்க்கிறது?என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் அதற்கு பதிலளித்த அவர், அதுபற்றி நான் அறியவில்லை. இதுகுறித்து விசாரித்து விட்டு பின்னர் தகவல் கூறுகிறேன் என்றார்.

சீனா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ பௌத்த ஆலயம் ஒன்றுக்குச் சென்றிருப்பதுடன், சில கலந்துரையாடல்களிலும் பங்குபற்றியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மஹிந்த ராஜபக்ஷவின் சீனப் பயணத்தை இந்திய அரசாங்கம் சரியான முறையில் ஆய்வு செய்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று மேற்கோற்காட்டி செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.