பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிபென்ன, 4 கட்டை, சிகிலெல்தென்ன பிரதேசத்தில் வைத்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 9 மில்லி மீட்டர் பிஸ்டல் ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் 10 ரவைகள் மற்றும் வாடகை மோட்டார் வாகனம் ஒன்றும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மாகந்துரே மதுஷின் நெருங்கிய உதவியாளரான, 38 வயதுடைய ´ஜோசா´ எனும் ஜோசப் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராவார்.
இவர் முன்னாள் இராணுவ வீரர் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரத்மலானை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய, ஹேரத் முதியான்செலாகே லக்ஷான் குணதிலக, உடவளவ பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கன்னங்கர கோரளாக நவோத் பிரமோதித்த மற்றும் இரத்மலானை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பொன்ன ஹொந்திலாகே அமித் பிரசாத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் நாளை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.