அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில்,
மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தடவையில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாதவிடத்து குறித்த இந்த மாகாண சபைகளின் தேர்தல்களை பிற்போட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமிடத்து எதிர்வரும் டிசம்பரில் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 02ம் திகதி கோரப்பட்டு, அக்டோபர்16 – 23ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறான நிலையில் டிசம்பர் 09ம் திகதி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படும் எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)