மாலைதீவில் எதிர்கட்சித் தலைவர் ஷேய்க் இம்ரான் அப்துல்லாவிற்கு 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தனது உரையில் கருத்துக்களை வெளியிட்டு, வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
2002 ஆம் ஆண்டு மொஹமட் நசீட் பதவி விலக்கப்பட்டதன் பின்னர் மாலைதீவில் அரசியல் குழப்பநிலை நீடிக்கின்றது.
இதன்பின்னர் குற்றவாளியாக காணப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள மொஹமட் நசீட்டிற்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் மருத்துவ சிகிச்சைகளுக்காக லண்டன் செல்லும் வகையில் அவர் தற்காலிகமாக இந்த மாத ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச கொள்கை எதிர்ப்பாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஷேய்க் இம்ரான் அப்துல்லா கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.