மாலைத்தீவில் நீதிபதிகள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு…

மாலைத்தீவில் முன்னாள் சர்வாதிகாரி, நீதிபதிகள், 4 பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ் கமிஷனர் உட்பட 9 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவு நாடான மாலைத்தீவில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அங்கு முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவும், அதிபர் யாமீன் அப்துல் கயூமின் மாலைத்தீவு முன்னேற்ற கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவித்தும் அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு நெருக்கடி நிலை அமுலானது. தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சர்வாதிகாரி யாமீன் அப்துல் கயூமும் கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்றத்தின் எஞ்சிய நீதிபதிகள், முந்தைய உத்தரவுகளை இரத்து செய்தனர்.

இந்நிலையில், மாலைத்தீவின் முன்னாள் சர்வாதிகாரி யாமீன் அப்துல் கயூம், நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹமீத், யாமீன் அப்துல் கயூம் மகன் உள்ளிட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ் கமிஷனர் உட்பட 9 பேர் மீது அங்கு உள்ள குற்றவியல் நீதிமன்றில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குற்றச்சாட்டின் பின்னணி குறித்து அரசு வக்கீல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில் அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கபப்படும்.

மேலும் நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹமீத் மற்றும் இன்னொரு நீதிபதி என 3 பேர் அரசை கவிழ்ப்பதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.