மின்சார இணைப்பு இல்லாத மல்லாவி ஆதார வைத்தியசாலை பிரேத அறை

மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மின் இணைப்பின்மை காரணமாக அலைபேசிகளின் ஒளியிலேயே சடலங்களை இனம் காணும் அவலம் தொடர்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு மின்சாரம் உள்ள போதிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பிரேத அறைக் கட்டடமானது சற்றுத் தொலைவிலேயே உள்ளது.

இவ்வாறு உள்ள பிரேத அறைக்குப் போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக பிரேத அறைக்கு இன்றுவரை மின்சார வசதி கிடையாது. இதனால் இங்கு இரவு நேரங்களில் கொண்டு வரப்படும் உடலங்களை பராமரிப்பது மற்றும் இனம் காண்பதில் பெரும் நெருக்கடி நிலையே காணப்படுகின்றது.

இதனால் இரவு நேரத்தில் கொண்டு வரப்படும் உடல்கள் அலைபேசிகளின் ஒளிமூலம் அல்லது வைத்தியசாலை பணியாளர்களின் ரோச் லைற்றின் ஒளி மூலமே இனம் காணப்படுகின்றது.

இவ்வாறு காணப்படும் பிரேத அறையின் முகப்பு வாசல் கதவிற்கு ஓர் பாதுகாப்பான பூட்டும் கிடையாது. கதவு கயிற்றினாலே கட்டப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் ஆவன செய்ய முன் வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட போரின் பின்பு போதிய அபிவிருத்தி இடம்பெற்றுள்ளதாக கூறினாலும் அவை நகரையும் பிரதான விதிகளை அண்டியும் மட்டும் இடம்பெறுகின்றதே அன்றி இது போன்ற கிராமப் புறங்களில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது