மியன்மார் அகதிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (02) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலுக்கு, பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
சில பௌத்த பிக்குகளது அச்சுறுத்தலுக்குள்ளான 31 மியன்மார் பிரஜைகள் தற்பொழுது தங்கவைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ இராணுவ மத்திய நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாது காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 29 ஆம் திகதி அரசாங்கத்திற்கு அறிக்கை விடுத்திருந்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் உட்பட பலர் கடந்த 28 ஆம் திகதி பூஸ்ஸ இராணுவ மத்திய நிலையத்துக்கு சென்று மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் பின்னரே குறித்த இந்த தகவலை ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் ஆராய்வதற்கே இன்று(02) விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)