மீண்டும் இலங்கையில் போருக்கு இடமில்லை – ஜனாதிபதி

மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்கள். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சித் திட்டங்களை இந்தச்சந்திப்பின் போது பாராட்டிய சமயத் தலைவர்கள், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு தங்களது நல்லாசிகளையும் தெரிவித்தனர்.

சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசு முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது இதன்போது ஜனாதிபதி கூறினார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கை சார்பாக சமயத் தலைவர்களின் தலையீடு அவசியமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, சமாதானத்திற்கான சமய மாநாடு போன்ற சந்தர்ப்பங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தன தேரர், பிராமன்வத்தே சீவலி தேரர் மற்றும் சமயத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றினர்.